வாட்ஸ்அப்பில் வலம் வந்த இளம்பெண்ணின் படம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரேணுகா நாயர் என்பது தெரிய வந்திருக்கிறது.
வீட்டில் இருக்கும் பெண்களிடம் திருட வரும் இளம்பெண் என்ற அடையாளத்துடன் ஒரு பெண்ணின் படமும் அத்துடன் அவரைப் பற்றிய ஒரு ஆடியோ வாய்ஸும் கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் சுற்றி வந்தது. அந்தப் பெண்ணின் படத்துக்கு ஆடியோ வாய்ஸ் கொடுத்து, அதில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பெயரைச் சேர்த்தது சென்னையில் பாதுகாப்புப் பிரிவில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் என்பதையும் சென்னை காவல் துறை இந்த விவகாரத்தில் காட்டிவரும் மெத்தனத்தையும் கடந்த இதழில் நாம் விரிவாக எழுதியிருந்தோம்.
அதன் பிறகே சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான், வாட்ஸ்அப்பில் வெளியான அந்தப் பெண்ணின் படம் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த ரேணுகா நாயர் என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே ரேணுகாவின் படத்துடன் வந்திருக்கும் மெசேஜில் அவர் துணிக்கடையில் திருடுவதாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரேணுகாவின் சகோதரர் சுதீர் நாயர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
''என்னோட சகோதரி ரேணுகா மும்பையில் எல்.பி.ஜி அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவரைப் பிடிக்காத யாரோ சிலர் வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனால் என் சகோதரி மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். அவரை எங்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. இதே உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படி ஒரு அவதூறு பரப்புவீர்களா... உங்களுக்கு வரும் தகவலை மற்றவருக்கு அனுப்புவதற்கு முன்பு அது உண்மையா என்று விசாரியுங்கள். தயவுசெய்து இனியாவது யாருடைய வாழ்க்கையிலும் விளையாடாதீர்கள். இப்படி ஓர் அவதூறுத் தகவலைப் பரப்பியவரை காவல் துறை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்!'' என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் சுதீர் நாயர்.
ரேணுகாவிடம் பேச முயற்சித்தோம். ''அவர் தற்போது பேசும் மனநிலையில் இல்லை!'' என்று சொல்லிவிட்டனர் அவரது குடும்பத்தினர்.
நன்றி :விகடன்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது